Wednesday, March 26, 2014

சீனப் போர்: பலிகடா ஆக்கப்பட்டாரா நேரு?

1962, சீனப் போரின்போது உண்மையில் என்ன நடந்தது என்பதுகுறித்து லெப்டினென்ட் ஜெனரல் ஹெண்டர்சன் புரூக்ஸும் பிரிகேடியர் பிரேமிந்திர பகத்தும் தெரிவிக்கும் கருத்துகள் இந்த மாதம் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. சீனப் போரில் நடந்த குளறுபடிகளுக்கு அப்போதைய பிரதமர் நேருவே காரணம் என்றும், இந்தியாவின் ராணுவக் கொள்கை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்த வலதுசாரி அரசியல் தலைவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்துவிட்டது. சீனாவுடனான சண்டையில் இந்தியா தோற்றதற்குக் காரணம், ராணுவம் தயார் நிலையில் இல்லை, ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களையும் தளவாடங்களையும் வாங்குவதில் போதிய அக்கறை காட்டப்படவில்லை, தெளிவான அரசியல் வழிகாட்டல் இல்லை, பாதுகாப்பு அமைச்சர் சரியில்லை என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் வெளிவருகின்றன.
நேருவைப் பலிகடாவாக்கும் முயற்சி
நேருதான் ராணுவத்தைப் பலமிழக்கவைத்துத் தோற்கடிக்க வைத்தார் என்றே பெரும்பாலானோர் சாடுகின்றனர். சில தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் பரிசீலித்து ஆராய்ந்தால், அந்த விமர்சனம் எந்த அளவுக்குத் தவறு என்று புரியும்.
1947 முதல் 1962 வரை இந்திய ராணுவத்தில் ஜவான்களின் எண்ணிக்கை 2,80,000-த்திலிருந்து 5,50,000 ஆக உயர்ந்துவந்திருக்கிறது. ராணுவத்துக்கான செலவு 1951-52-ல் ரூ.190.15 கோடியாக இருந்தது; 1961-62-ல் ரூ. 320.34 கோடியாக அதிகரித்தது. புதிதாக சுதந்திரம் அடைந்த, ஏழை மக்களை அதிகம் கொண்ட நாடாக இருந்த நிலையிலும், ராணுவத்துக்காக இந்த அளவுக்குச் செலவிடப்பட்டிருக்கிறது என்று ராணுவம் தொடர்பான புள்ளிவிவரங்களில் நிபுணரான கே. சுப்ரமணியம் 1970-ல் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
தரைப்படைக்காக ஒரு டிவிஷன் அளவுக்கு செஞ்சுரியன் ரக டேங்குகளும், 2 ரெஜிமெண்டுகளுக்குத் தேவைப்பட்ட ஏ.எம்.எக்ஸ்.-13 இலகு ரக டேங்குகளும் வாங்கப்பட்டன. இந்த டேங்குகளைக் கொண்டுதான் கமேங் என்ற இடத்தில் சீனத் துருப்புகளுக்கு எதிராக இந்தியா சண்டையிட்டது. சீனப் படையிடம் டேங்கு வசதி இல்லாத நிலையிலும், இந்திய ராணுவத்தைக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டுத் தோற்கடித்தது.
ஒரே சமயத்தில் சண்டை விமானமாகவும் குண்டு வீச்சு விமானமாகவும் பயன்படக்கூடிய ‘ஹண்டர்’ ரக விமானங் களை ஒரு ஸ்குவாட்ரன் அளவுக்கு விமானப் படை வாங்கியிருந்தது. இதுபோக இரண்டு ஸ்குவாட்ரன்கள் ‘ஔராகான்ஸ்’ ரக போர் விமானங்களும் ‘நாட்’ ரக விமானம் இரண்டும்கூட வாங்கப்பட்டன. சீனாவிடம்கூட அப்போது இது போன்ற விமானங்கள் இல்லை. கடற்படையோ விமானம்தாங்கிக் கப்பலொன்றையும் மூன்று நாசகாரி ரகக் கப்பல்களையும், புதிதாக 11 போர்க் கப்பல்களையும் வாங்கியிருந்தது.
நேரு எப்போதுமே சமாதான விரும்பியாக இருக்கலாம், ஆனால் தன்னுடைய ராணுவத்தையும் அவர் தயார் நிலையிலேயே வைத்திருந்தார் என்பதை இவற்றிலிருந்து அறிய முடிகிறது. இருந்தும், இந்தியா தோற்றது. சண்டைக்குத் தயாரான ராணுவம் நம்மிடம் இல்லாததால் நாம் தோற்கவில்லை; தவறான முறையில் சண்டையிட்டதால்தான் தோற்றோம். உலகின் பல நாடுகளில் மிகச் சிறந்த ராணுவங்களுக்கும் இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.
அப்படியானால் எங்கே நடந்தது தவறு?
சீனத்தின் சின்ஜியாங்கையும் திபெத்தையும் இணைக்க அக்சாய் சின் சமவெளிப்பகுதியில் நீண்ட சாலையை
1957-லேயே சீனா அமைத்து முடித்து விட்டது. புல் பூண்டு கூட முளைக்காத களர் நிலம் இப்போது ராணுவரீதியாக முக்கியமான தளமாகப் பயன்பட்டது சீனாவுக்கு. 1959-ல்
சீன ஆதிக்கத்துக்கு எதிராக திபெத்தில் புரட்சிக் குரல்கள் உயர்ந்தபோது, இந்தியாதான் இவர்களுக்குத் தூபம்போடுகிறதோ என்று சீனா கருதியதால் பதற்றம் அதிகரித்தது. அக்சாய் சின் பகுதி நோக்கிச் சென்ற இந்திய ரோந்து அணி தடுத்து நிறுத்தப்பட்டது. ஒரு முறை இந்தியக் குழுவினரை நோக்கி சீனர்கள் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நிலைகொண்டிருந்த இந்தியத் துருப்புகளுக்கு சீனத்திடமிருந்து மிரட்டல்கள் வந்தன. இடத்தைக் காலிசெய்துவிட்டு உங்கள் நாட்டுக்குச் செல் லுங்கள் என்று எச்சரித்தனர். 1959 அக்டோபரில் தெற்கு லடாக்கின் கோங்கா என்ற இடத்தில் இந்திய ராணுவக் காவல் சாவடி மீது சீனத் துருப்புகள் துப்பாக்கிகளால் சுட்டு ஒன்பது பேரைக் கொன்றுவிட்டு பத்துப் பேரைச் சிறைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இப்படியெல்லாம் இந்தியாவுக்கு நெருக்கடி தந்து அருணாச்சலப் பிரதேசத்துக்குப் பதிலாக அக்சாய் சின் பகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதே சீனாவின் நோக்கமாக இருந்தது என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவிக்கிறது. நேருவும் இந்திய மக்களிடம் அத்தகைய பரிமாற்றத்துக்கு ஆதரவான எண்ணத்தை உருவாக்கவே திட்டமிட்டிருந்தார். கோங்கா வில் இந்தியச் சாவடி மீது சீனா நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல் அவரது முடிவை மாற்றிவிட்டது.
முன்னரங்கக் கொள்கை
இதற்குப் பதிலடியாக ‘முன்னரங்கக் கொள்கையை' நேரு முன்வைத்தார். 1960 முதல் இந்திய ராணுவ ஜவான்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து அக்சாய் சின் பகுதிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலைகொள்ளத் தொடங்கினர். சீனா கைப்பற்றிய நிலங்களின் உள்பகுதியிலும் இந்தியத் துருப்புகள் இப்படிப் போய் நின்றுகொண்டனர்.
1962-ன் கோடைக் காலத்தில் அக்சான் சின்னை ஒட்டிய பகுதிகளில் இந்தியத் துருப்புகளும் சீனத் துருப்புகளும் ஆயுதங்களுடன் நேருக்கு நேர் நின்றுகொண்டனர். ஆனால், அப்போது இந்தியத் துருப்புகளுக்கு உணவு, தளவாடம், ஆயுதங்கள் போன்றவற்றைக் கொண்டுபோய்ச் சேர்க் கவும், அடிபட்டவர்களைச் சிகிச்சைக்காக முகாம்களுக்குத் தூக்கிவரவும் சாலை வசதிகளே இல்லாமலிருந்தது. எனவே, துருப்புகள் போய் நின்றுகொண்ட பகுதிகளை நீண்ட நாள்களுக்கு அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் அப்படிப் போய் நின்றது ராணுவரீதியாக எந்த வகையிலும் உதவவில்லை. மாறாக, நீங்கள் திரும்பிப் போங்கள் என்று சீன அரசு கூறினால், நீங்களும் திரும்புங்கள் என்று பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்றே கருதப்பட்டது. இந்திய ராணுவத்தை சீனா நிர்பந்தப்படுத்தி வெளியேற்றாது என்றே நேரு உறுதியாக நம்பினார்.
அவர் நினைத்தது தவறு மட்டுமல்ல, ஏற்கத் தக்கதும் அல்ல. ராணுவரீதியாக நாம் பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு இந்தியா வுடன் மோதலை மேற்கொள்ளாதீர்கள் என்றே தன்னுடைய தளபதிகளுக்கு சீன அதிபர் மாசேதுங் அறி வுறுத்தியிருந்தார். அப்படி இந்தியாவைத் தாக்கினால் அதையே சாக்காக வைத்து அமெரிக்கா, கிழக்கு ஆசியாவில் மூக்கை நுழைக்கும் என்று அஞ்சினார்.
சோவியத் தலைவர் நிகிடா குருஷ்சேவ், கோங்கா காவல் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களை சீனா தாக்கியதைக் கண்டித்தார். “இந்தியாவுடன் சண்டைக்குப் போகாதீர்கள், வேறு வழியில்லாமல் அமெரிக்காவின் அரவணைப்பில் இந்தியா சென்றுவிடும்” என்றும் எச்சரித்தார்.
நேருவின் முன்னரங்கக் கொள்கைக்கு மாற்றுச் சிந்தனை எதையும் இந்திய ராணுவத் தலைமையும் முன்வைக்கவில்லை. இந்திய ராணுவத்தின் மேற்கத்திய படைப்பிரிவின் தலைமைத் தளபதியான லெப். ஜெனரல் தௌலத் சிங் ஒரு யோசனையைத் தெரிவித்தார். “சீனா இப்போது பிடித்துள்ள நிலப் பகுதிகள் அப் படியே இருக்கட்டும். நாம் நம்முடைய எல்லைக்கு முதலில் நல்ல சாலைகளைப் போடுவோம். பிறகு, தளவாடங்களையும் ஆயுதங்களையும் அங்கே கொண்டுபோய்ச் சேர்ப்போம். லடாக்கில் ஒரு டிவிஷன் அளவுக்குத் துருப்புகளை மேலும் குவிப்போம். அதன் பிறகு சீனாவிடம் பேசலாம்” என்றார்.
தௌலத்தின் இந்த யோசனை, இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவம் மேற்கொண்டு வந்த ஊடுருவல் களையும் ஆக்கிரமிப்புகளையும் தடுத்து நிறுத்தும் திறனற்றதாக இருந்தது என்று ராணுவ விஷயங்களில் நிபுணரான அறிஞர் நாத் ராகவன் நினைவுகூர்கிறார்.
கடந்த ஆண்டு (2013) லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி என்ற இடத்திலும் 1962 போருக்கு முந்தைய சூழலே திரும்பியது. இந்தியத் துருப்புகளும் சீனத் துருப்புகளும் நேருக்கு நேர் கைகலக்கும் நிலைமை ஏற்பட்டது. சீனாவில் புதிதாகக் காணப்படும் தேசிய எழுச்சியும் ராணுவத்தை வலுப்படுத்துவதில் அது காட்டும் தனிக் கவனமும் இந்தியாவும் தன்னுடைய ராணுவத்தை எல்லா வகையிலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்துவருகிறது.
© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி.

No comments:

Post a Comment