Monday, June 9, 2014

காலிஸ்தான் இயக்கம்

நடுவில் இருப்பவர்தான் பிந்தரன்வாலே
காலிஸ்தான் இயக்கம் என்பது சீக்கியர்களுக்கு என்று தனி நாடு கோரும் அரசியல் இயக்கம். பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் பாயும் புனிதப் பிரதேசம் என்று பொருள். பஞ்சாப்தான் பாரம்பரியமாகவே சீக்கியர்களின் தாயகமாக இருந்துவந்துள்ளது. பிரிட்டிஷ்காரர்கள் கைப்பற்றுவதற்கு முன்னால் பஞ்சாப் பிரதேசத்தை சீக்கியர்களே தொடர்ந்து 82 ஆண்டுகள் ஆண்டுவந்தனர்.
மகாராஜா ரஞ்சித் சிங் சீக்கியர்களுடைய பகுதிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஆட்சி செய்துவந்தார். அதே சமயம் சீக்கியர்களுடைய பிரதேசத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் வாழ்ந்தனர்.
பிரிட்டிஷ் இந்தியாவில் லூதியானா மாவட்டத்தில் சீக்கியர்கள்தான் அதிகம் வசித்தனர். 1940-ல் பாகிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி லாகூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியது. முஸ்லிம்கள் தங்களுக்கென்று தனி நாடு கேட்டு பெற்றுவிடுவார்கள். இந்துக்களுக்கு இந்துஸ்தானம் இருக்கும். நமக்குத்தான் தனி நாடு இல்லாமல் போய்விடும் என்று நினைத்த சீக்கியர்கள், காலிஸ்தான் என்ற தனி நாடு கோரினார்கள். இந்தியாவில் உள்ள பஞ்சாபையும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபையும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து காலிஸ்தான் அமைக்க வேண்டும் என்று கோரினர்.
பஞ்சாபி சுபா
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானில் வசித்த சீக்கியர்களும் இந்தியா வந்தனர். அவர்கள் பஞ்சாப் தவிர இமாசலப் பிரதேசம், ஹரியானா ஆகியவற்றிலும் குடியேறினர். அகாலி தள இயக்கம் ‘பஞ்சாபி சுபா' என்ற கோரிக்கையை முன்வைத்தது. பஞ்சாபியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இணைத்து தனி பிரதேசம் வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கை. இந்திய அரசு தொடக்கத்தில் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
சீக்கியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரித்துவந்தாலும் 1965-ல் பாகிஸ்தானுடனான யுத்தத்துக்குப் பிறகு சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை இணைத்துத் தனி பஞ்சாப் மாநிலத்தை ஏற்படுத்தியது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஹரியானா, இமாசலப் பிரதேசம் என்று பிரிக்கப்பட்டது.
ஆனால், இது சீக்கியர்களைத் திருப்திப்படுத்தவில்லை. மத்திய அரசு மாநிலத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரிக்கிறது, பஞ்சாபின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, சீக்கியர்களின் மொழி, கலாச்சாரம் பாதுகாக்கப்பட இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தனி நாடு கோரிக்கையை அகாலி தளக் கட்சி ஏற்காவிட்டாலும் சீக்கியர்களின் இதர கோரிக்கைகளை ஆதரித்தது.
ஜகஜீத் சிங் சௌஹான்:
1971-ல் ஜகஜீத் சிங் சௌஹான் அமெரிக்கா சென்று தனி காலிஸ்தான் நிறுவப்போவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் விளம்பரமே கொடுத்தார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் உடனே கோடிக்கணக்கான ரூபாய்களை அவருக்கு அனுப்பினர். 1980 ஏப்ரல் 12-ல் அவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து காலிஸ்தான் தனி நாடு ஏற்பட வேண்டியதுகுறித்துப் பேசினார்.
பஞ்சாபின் ஆனந்த்பூர் சாஹிப் என்ற ஊரில் காலிஸ்தான் தேசிய கவுன்சில் என்ற அமைப்பை அதற்கு முன்னதாக அவர் ஏற்படுத்தியிருந்தார். அந்த அமைப்பின் தலைவராகத் தன்னையும் பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சாந்து என்பவரையும் அறிவித்துக்கொண்டார். பிறகு, லண்டன் சென்று காலிஸ்தானை அமைத்துவிட்டதாகவே அறிவித்தார். அதே வேளையில் அமிர்தசரஸ் நகரிலிருந்து பல்பீர் சிங் சாந்துவும் அதே அறிவிப்பை வெளியிட்டார்.
காலிஸ்தான் என்ற தனி நாட்டுக்கான அஞ்சல் தலைகளையும் செலாவணிகளையும்கூட அவர் வெளியிட்டார். இதையெல்லாம் தடுக்காமல் வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியையும் இந்திரா காந்தியையும் அகாலி தளத் தலைவர் ஹர்சந்த் சிங் லோங்கோவால் கடுமையாகக் கண்டித்தார். இவையெல்லாம் காங்கிரஸ் தூண்டுதலில் நடைபெறும் நாடகம் என்றார்.
காலிஸ்தான் இயக்கம் இப்படி நியாயமாகத் தொடங்கினாலும் பிறகு விளையாட்டாகப் பரவத் தொடங்கியது. 1970-களிலும் 1980-களிலும் உச்சத்துக்குச் சென்றது. காலிஸ்தான் வேண்டும் என்று ஒன்றல்ல, பல்வேறு இயக்கங்கள் சிறிதும் பெரியதுமாகத் தோன்றத் தொடங்கின. அரசியல்ரீதியாக அகாலி தளத்தைப் பலவீனப்படுத்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே என்பவரை பிரதமர் இந்திரா காந்தி ஊக்குவித்தார் என்றும் சொல்வார்கள். அவர்தான் அமிர்தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவிலில் ஆயுதம் தாங்கிய தனது ஆதரவாளர்களுடன் புகுந்துகொண்டு அதைக் கைப்பற்றினார்.
அரசியல் ரீதியாகவும் வேறு காரணங்களுக்காகவும் தன்னைப் பகைத்தவர்களைக் கொல்லத் தொடங்கினார். இந்துக்களை மட்டுமல்லாமல் சீக்கியர்களையும் கொல்ல அவர் தயங்கவில்லை. அவருடைய மார்க்கப்பற்று, தனி நாடு அடைந்துவிடுவோம் என்ற லட்சிய வெறி ஏராளமான சீக்கியர்களை அவர்பால் ஈர்த்தது. இப்படித்தான் அவர் காலிஸ்தான் தீவிரவாதியாக மாறி பிறகு பயங்கரவாதியாகவே ஆகிவிட்டார்.
பழிவாங்கிய ஷபக் சிங்
வங்கதேசப் போரில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மத்திய அரசால் கௌரவிக்கப்பட்ட ஷபக் சிங், ஊழல் குற்றச்சாட்டு காரணமாகப் படையிலிருந்து விலக்கப்பட்டார். அதைப் பெரிய அவமானமாகக் கருதிய அவர் அதற்குப் பழிவாங்கும் விதத்தில் பிந்தரன்வாலேயுடன் சேர்ந்துகொண்டு போர்ப் பயிற்சி அளித்தார்.
தியாகியான பயங்கரவாதி
ஆயுதம் ஏந்திய 600 ஆதரவாளர்களுடன் 1982-ல் பிந்தரன்வாலே பொற்கோவிலுக்குள் புகுந்தார். அன்று முதல் அவர் செல்வாக்கு உலகம் முழுக்க வளரத் தொடங்கியது. ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின்போது அவர் கொல்லப்பட்டார். அவருடைய ஆதரவாளர்கள் அவரை இன்றும் தியாகி என்றே அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment