Showing posts with label Husband. Show all posts
Showing posts with label Husband. Show all posts

Monday, November 7, 2011

வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்டுப் பிடிங்க!

 

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.

வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம்,

தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.

சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.

நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.

என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.

சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.

வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.

சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.

காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க...!