Friday, October 15, 2010

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

கபிலுக்கு செய்த அவமானத்தை சச்சினுக்கும் செய்துவிடாதீர்கள்!

எண்பதுகளில், கபில்தேவ் சகாப்தத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகர்களாக இருந்த பலரும், இன்று கிரிக்கெட் என்றாலே வெறுப்புடன் பார்க்கும் நிலை. எங்கும் சூதாட்டம், வீரர்களின் பண வெறி, கிரிக்கெட் வாரியத்தின் அரசியல் விளையாட்டு என இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கபிலுக்கு நிகரான இயல்புகளுடன் கூடிய கிரிக்கெட் வீரர்கள் இல்லாமல் போனது முக்கிய காரணம்.

அன்றைக்கு இந்திய அணியின் ஸ்கோர் என்னவென்று கேட்கும்போதே, “கபில் இருக்காரா.. அவுட்டா?” என்று கூடவே ஒரு துணைக் கேள்வியும் கிளம்பியதைப் பாரப்த்திருப்பீர்கள். இன்றும் அந்தக் கேள்வி தொடர்கிறது, ‘சச்சின் ஆடறாரா?’.

கபில், அமர்நாத், பின்னி காலத்து ரசிகர்களுக்கு இன்று பெரும் ஆறுதலாக இருக்கும் ஒரே வீரர், சச்சின் டெண்டுல்கர்தான் என்றால் மிகையல்ல. ‘இது தனிமனித துதிதானே… குழு விளையாட்டான கிரிக்கெட்டில் இது ஆபத்தல்லவா?’ என்று கேட்கலாம்.

இதற்கான காரணத்தை ஆராயப்போனால், அது இந்திய அணியின் தேர்வு முறை, எப்போதும் தனியொரு வீரரே அணியின் வெற்றியை தோளில் சுமப்பது என வேறு திக்கில் போகும். இப்போதைக்கு அது வேண்டாம்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே பெங்களூரில் புதன்கிழமை முடிந்த டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் ஆடிய ஆட்டம், நீண்ட நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் ரசிகர்களை உள்ளம் குளிர வைத்தது.

முதல் இன்னிங்ஸில் அட்டகாசமாக இரட்டை சதமடித்த டெண்டுல்கர், இரண்டாவது இன்னிங்ஸில் அவுட்டின்றி 53 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய தூணாக நின்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் புரட்டி எடுக்க டெண்டுல்கர் பெரும் உதவி் புரிந்தார். இந்திய பந்துவீச்சாளர்களும் சோடை போகவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். பெங்களூர் டெஸ்டில் ஜாஹீர் கானின் பந்துவீச்சு ரோஜர் பின்னியின் மாயாஜால மீடியம் பேஸை நினைவூட்டியது.

எல்லோரும்தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்… டெண்டுல்கரிடம் மட்டும் என்ன சிறப்பு?

கிரிக்கெட்டை ஜென்டில்மென் விளையாட்டு என்பார்கள். அந்த வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர்கள் கபில்தேவ், மால்கம் மார்ஷல், கர்ட்னி வால்ஷ்… இப்போது சச்சின் டெண்டுல்கர்.

மைதானத்தில் சிறப்பாக ரன்கள் குவிக்கும் ஆஸ்திரேலியாவின் பாண்டிங் அல்லது அவரது சீனியர் ஸ்டீவ் வாஹ் அல்லது அவருக்கும் முந்தைய ஆலன் பார்டர் போன்றோர் புரிந்த சாதனைகள் நினைவுக்கு வருவதில்லை. அவர்களின் அழுகுணித்தனங்கள்தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். பாகிஸ்தான் வீரர்கள் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியாவை விட பலமடங்கு மோசமானவர்கள்.

ஆனால் கபில்தேவை நினைத்தால் அவரது சிரித்த முகமும், மைதானத்தில் எதிரணி வீரர்கள் தோளில் கைபோட்டுக் கொண்டு விளையாட்டை விளையாட்டாய் நேசிக்கும் மனப்பாங்கும் நமது மனக்கண்ணில் மின்னும்.


ஹைதராபாதில் மேற்கிந்திய தீவுகளுக்கெதிராக நடந்த ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற நிலை. வழக்கம்போல கபில்தான் கடைசி ஓவர் வீசினார். முதல் விக்கெட் விழுந்துவிட்டது. அடுத்த இரு பந்துகளில் 4 ரன்கள் கொடுத்தார். இன்னும் 5 ரன்கள் எடுத்தால் மேற்கிந்திய தீவு வென்றுவிடும் நிலை. கபில் பந்து வீசும் முனையில் வில்லியம்ஸ் என்ற விக்கெட் கீப்பர் ஆடிக்கொண்டிருந்தார். நான்காவது பந்தைப் போடும் முன் அவர் தோளில் கை போட்டுக் கொண்டு பேசிய கபில், சிரித்தபடி ஸ்டம்புகளைக் காட்டி ‘பேக்அப்’ என்று கூறிவிட்டு, மீண்டும் பந்து வீச ஓடி வந்தார்.

அவர் சொன்னதுபோலவே, எதிர்முனையில் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது கபில் பந்து. இந்தியா வென்றது. உடனே வில்லியம்ஸ் கபிலை நோக்கி கட்டை விரலை உயர்த்திக் (தம்ஸ்அப்) காட்டி சிரிக்க, அவரை கபில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இந்த மாதிரி ஒரு ஸ்போர்டிவான முடிவை எந்த கிரிக்கெட் போட்டியிலாவது சமீப நாட்களில் பார்த்திருப்பீர்களா…

1987-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் போது, பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில், பந்தை அடிக்காமலேயே ரன் எடுக்க அவசரப்பட்டு ஓடி வந்தார் அபுதுல் காதர். க்ரீஸை விட்டு சிறிது தூரம் வந்துவிட்டார். விதிப்படி அது தவறுதான். அப்போது பந்து கர்ட்னி வால்ஷ் கையில் இருந்தது. ஆனால் அவர் ஸ்டம்பை நோக்கி வீசாமல், காதரை எச்சரித்தார். அவரும் உடனே க்ரீஸுக்குள்ளே போய் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொண்டார். அதன் பிறகு போர், சிக்ஸர் என வெளுத்தார். விளைவு, போட்டியிலிருந்தே மேற்கிந்தியத் தீவு வெளியேறியது. இருந்தாலும் பாகிஸ்தானின் வெற்றியைவிட, வால்ஷின் அந்த பெருந்தன்மை பெரிதும் பேசப்பட்டது.

இவர்கள் வரிசையில் வைத்து பாராட்டப்பட வேண்டிய அதிசயமான வீரர்தான் சச்சின் டெண்டுல்கரும்.

மைதானத்தில் கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பது, எதிரணி வீரர்களிடம் மல்லுக்கு நிற்பது, அம்பயரை முறைப்பது என எதிலும் இறங்காதவர் சச்சின். எந்த நாட்டு கிரிக்கெட் வீரரும், சச்சினை மட்டும் மிக நாகரீகமான, பண்புள்ள வீரர் என்று பாராட்டுவதைக் கேட்கலாம். இன்று, ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேனுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறார் சச்சின்.

ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள சர்வே முடிவில் 84 சதவீத ஆஸ்திரேலியர்கள் சச்சினை சிறந்த வீரராகக் கருதுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். ‘இந்தியாவின் விலை மதிப்பில்லா விளையாட்டு வைரம் சச்சின் டெண்டுல்கர்’ என்று பெருமைப்படுத்தியுள்ளது அந்தப் பத்திரிகை.

உலகில் கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாடுகளிலும் சச்சின் ஒரு மரியாதைக்குரிய வீரராகவே பார்க்கப்படுகிறார்.

சச்சின் தன் சொந்த சாதனைகளுக்காகவும் பணத்துக்காகவும் ஆடுவதாக நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அதில் சற்றும் உண்மையில்லை என்பது அவர் ஆட்டத்தைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும்.


“கிரிக்கெட்டில் நான் அதிக முக்கியத்துவம் தருவது ஒரேயொரு விஷயத்துக்குத்தான்… அது நேர்மை. இந்த விளையாட்டை நேர்மையான முறையில், சுத்தமாக ஆட வேண்டும். பணம் பெரிதல்ல. அதுதான் இருபதாண்டுகள் கடந்தும் இன்னும் இந்த விளையாட்டில் என்னை இருக்க வைக்கிறது” என்கிறார் சச்சின்.

“கிரிக்கெட் மட்டையை கையிலெடுத்த பிறகு பணத்தைப் பற்றியோ, எனது தனிப்பட்ட சாதனைகள் குறித்தோ நான் யோசிப்பது கூட கிடையாது. அதிக பணம், குறைந்த ரன்கள் என்ற கேவலமான நினைப்பு என் மனதிலிருந்திருந்தால் என்னால் தூங்கமுடியாமலே போயிருக்கும்” என்ற அவரது வார்த்தைகளில் எந்த பாசாங்கையும் காண முடியாது.

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ள சச்சின், இந்திய அணிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் ஒரு விலை மதிப்பற்ற கோஹினூராய் ஜொலிக்கிறார்!

இந்திய அணி தேர்வாளர்களுக்கு ஒரேயொரு விண்ணப்பம்… கபிலுக்கு செய்தது போல, ‘எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள்’ என்ற கேள்வியை சச்சினிடமும் கேட்குமாறு மீடியாவைத் தூண்டிவிடாதீர்கள்..!

No comments:

Post a Comment