Saturday, October 16, 2010

ரஜினி – சச்சின்… சில ஒற்றுமைகள்!

 ஒரு ரசிகரின் ‘டச்சிங்’ அலசல்
எதிர்ப்பார்ப்புகள், சுயநலங்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனிதரை, கலைஞரை மக்கள் உயிருக்கு நிகராக நேசிப்பார்களா…?

இந்த கேள்விக்கான விடையை என் அனுபவத்தில் இரண்டு மாபெரும் மனிதர்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்.

அதில் ஒன்று எனது பள்ளிப் பருவத்தில்… அமரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருந்தபோது.

இப்போது ரஜினியின் மூலமாக. சொல்லப் போனால், அரசியல்-பதவி என எதுவும் இல்லாமலேயே, ஒரு பெரிய விஷமிக் கூட்டத்தின் நச்சுப் பிரச்சாரங்களையும் தாண்டி மக்களின் மனதில் ரஜினி ஆட்சி செய்வது எத்தனை பெரிய சாதனை!

ரஜினியின் தீவிர ரசிகர்கள் என்று கூறும் பலருடனும் பேசியதில், தெரிந்த ஒரு விஷயம், அவர்களில் பலர் நல்ல விஷயஞானமுள்ளவர்கள் என்பது. குறிப்பாக எழுதுவதில். தேர்ந்த எழுத்தாளனின் சரளத்தோடு, சுவையாக எழுதும் திறமை இவர்களில் பலருக்கும் இருக்கிறது.

கீழே நீங்கள் படிக்கவிருப்பது, நமக்கெல்லாம் பரிச்சயமான ஒரு ரஜினி ரசிகரின் கடிதம்தான். அதாவது கடிதமென்று தனியாக எழுதப்பட்டதல்ல. இரு கட்டுரைகளுக்கு அவர் எழுதிய கமெண்டுகள்தான். அவற்றை தொகுத்துத் தந்திருக்கிறேன். படித்துவிட்டுச் சொல்லுங்கள்!

-வினோ

1980 ல் வெளிவந்த முரட்டுக்காளை படத்திலிருந்து 30 வருடங்கள் என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறார் ரஜினி.

என் வாழ்வில் சிறு வயதில் நடந்த சம்பவங்களில் அதிகமாக நினைவில் இருப்பவை ரஜினி சம்பந்தப்பட்டவையே. முரட்டுக்காளையிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. யாருடன் எந்தக்காட்சி என்பது உட்பட.

இன்றும் ரஜினி படத்தை 2 வினாடிகள் பார்த்தால் போதும், அது எந்தப்படம் என்பதை என்னால் 99 சதவீதம் சொல்லிவிட முடியும். முரட்டுக்காளையிலிருந்து எந்திரன் வரையிலான ரஜினி படங்களின் பெயர்களை மூச்சுவிடாமல் தடுமாறாமல் என்னால் சொல்லமுடிகிறது.

இது எல்லாம் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரஜினி எந்த அளவுக்கு என்னில் ஊடுறவியுள்ளார் என்பதை நினைக்கும்போது அதுவும் சொல்லத் தோன்றவில்லை. லதா ரஜினி அவர்களுக்கு முன்பிருந்தே ரஜினியை நேசித்தவன் நான். அந்த வகையில் அவருக்கு நான் சீனியர்!!


என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் இரண்டே சூப்பர் ஸ்டார்கள்தான் ஒன்று ரஜினி… இன்னொருவர் சச்சின்.

சத்தியமாக இதை நான் ரஜினி ரசிகன் என்பதற்காக சொல்லவில்லை. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் நிறைய.

முதல் ஒற்றுமை, துவக்க காலத்தில் இருந்தே இருவருமே தங்கள் துறையில் முடி சூடா மன்னர்களாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்களுக்கு முன் தங்கள் துறையில் உச்சத்தில் இருந்தவர்களை காப்பி அடிக்காமல் தங்களுக்கென்று ஒரு பிரத்தியேக ஸ்டைலை உருவாக்கினர். இன்று இவர்களை பார்த்துத்தான் மற்றவர்கள் காப்பியடிக்கிறார்கள்.

வயது ஆக ஆக இருவரின் திறமையும்,புகழும் கூடிக்கொண்டே போகிறது. இருவருமே மற்றவர்களை விட அதிக பட்சமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தவர்கள். அந்த எல்லா விமர்சனங்களுக்கும் பேச்சில் பதில் சொல்லாமல் செயலில் பதில் சொன்னவர்கள்.

ஒவ்வொரு முறையும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடிப்பவர்கள். புகழின் உச்சத்தை பார்த்த பின்னரும் தன்னிலை மாறாமல் அடக்கமாக இருக்கிறார்கள்.

இருவருமே தங்கள் துறைகளில் தங்களுக்கும் தங்களுக்கு அடுத்து இருப்பவர்களுக்குமான இடைவெளியை மிகவும் அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இரண்டாமிடத்தில் இருப்பவர்களால் நெருங்கவே முடியாத உயரம் அது.

இருவருமே தங்கள் குடும்ப வாழ்வில் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறார்கள். இருவருமே இன்னும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. இருவரின் ஓய்வைப் பற்றியும் மற்றவர்கள் விவாதிக்கிறார்கள், ஆனால் இவர்களோ இன்னும் ஒரு தலைமுறையை பார்ப்பார்கள் போலிருக்கிறது!

அடுத்த சச்சின் அடுத்த ரஜினி என்று வர்ணிக்கப்பட்டவர்கள் எல்லோருமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்.

பெரும்பாலான மக்களுக்கு, கிரிக்கெட்டும், சினிமாவும் விருப்பமானவை அல்ல. ஆனால் சச்சினும், ரஜினியும் விருப்பமானவர்கள். இவர்கள் எது செய்தாலும் மீடியாவுக்கு அதுதான் தலைப்புச் செய்தி.

சச்சின் விளையாடுவதை நிறுத்தும்போது என்னைப் போன்ற நிறையப் பேருக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் போய்விடும். ரஜினி நடிப்பதை நிறுத்தும்போது என்னைப்போன்ற நிறையப் பேருக்கு சினிமாவின் மீதான ஆர்வம் போய்விடும்.

அதுவரை சச்சினின் ஆட்டத்தையும், ரஜினியின் படத்தையும் அணு அணுவாக ரசிப்போம். இது இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை!

No comments:

Post a Comment